VV-040T: மணி சத்தின் இருண்ட பக்கம்: ஏன் சாண உரமும் உங்கள் மண்ணுக்கு நஞ்சாகும்
இயற்கை மற்றும் ஆர்கானிக் விவசாயத்தில் தொழுஉரமும், சாணக் கம்போஸ்ட்டும் எந்தக் குறையும் இல்லாத ஒரு புனிதப் பொருளாகவே பார்க்கப்படுகிறது. "நிலத்துல எவ்வளவு அதிகமா எருவைக் கொட்டுறோமோ, அவ்வளவு நல்லது" என்பதுதான் பெரும்பாலானோரின் பொதுவான எண்ணம்.
ஆனால், பல வருடங்களாக இயற்கை விவசாயம் செய்யப்படும் நிலங்களின் மண் பரிசோதனை அறிக்கைகளை (Soil Test Reports) உற்றுப் பார்த்தால் அங்கே ஒரு ஆபத்தான உண்மை வெளிப்படுகிறது: அதிதீவிர பாஸ்பரஸ் நச்சு (Severe Phosphorus Overload).
பல ஆண்டுகளாக டன் கணக்கில் சாணக் கம்போஸ்ட்டைக் கொட்டிய பல விவசாயிகளின் பயிர்களில் திடீரென இலைகள் மஞ்சளாவது, வளர்ச்சி குன்றுவது, மற்றும் நுண் தாதுக் குறைபாடுகள் ஏற்படுவதைப் பார்க்கலாம்.
இதற்குக் காரணம்: அளவுக்கு அதிகமான பாஸ்பரஸ் (மணிச்சத்து)!
இந்த கட்டுரையை நான் எழுதுவதற்க்கு காரணமும் நான் பார்த்த ஒரு ஒரு மண் பரிசோதனை ரிப்போர்ட். பல வருடங்களாக அங்கக விவசாயம் செய்யும் நிலம் இது.
ப்ரைவசி காரணங்ககளுக்காக அந்த முழு அட்டவணையையும் இங்கே கொடுக்கவில்லை. அதில் இருக்கும் ஒரு தகவல் தான் இந்த கட்டுரையின் மூலம்.
- மணி சத்து (Phosphorus) - 133 ppm
மண்ணில் ஏற்கனவே பாஸ்பரஸ் அதிகமாக இருக்கும் போது, மேலும் மேலும் சாணக் கம்போஸ்ட்டைக் கொட்டுவது மண்ணில் உள்ள நன்மை செய்யும் பூஞ்சைகளை அடியோடு அழித்து, பயிர்களைப் பட்டினி போட்டுவிடும்!
1. எருவில் இருக்கும் கணக்கு முரண்பாடு (N:P Mismatch)
சாண உரங்கள் ஏன் நிலத்தில் பாஸ்பரஸை அளவுக்கு அதிகமாக ஏற்றுகின்றன? தாவரத்தின் உடலியலுக்கும் எருவின் வேதியியலுக்கும் உள்ள வித்தியாசமே இதற்கு அடிப்படைக் காரணம்:
- பயிர்களின் தேவை: ஒரு விவசாயப் பயிர் நைட்ரஜனையும் (N) பாஸ்பரஸையும் (P) எடுத்துக்கொள்ளும் சராசரி விகிதம் 5:1 முதல் 10:1 ஆகும் (அதாவது 1 பங்கு பாஸ்பரஸுக்கு 5 முதல் 10 பங்கு நைட்ரஜன் தேவை).
- எருவில் உள்ள அளவு: ஆனால் மாட்டுச் சாணம், ஆட்டு எரு, மற்றும் கோழி எருவில் இந்த விகிதம் 1:1 அல்லது 2:1 என்ற அளவிலேயே உள்ளது.
நைட்ரஜன் காற்றில் ஆவியாகவோ அல்லது நீரில் அடித்துச் செல்லப்படவோ கூடும். ஆனால் பாஸ்பரஸ் மண்ணை விட்டு எளிதில் வெளியேறாது. இதனால் ஒவ்வொரு முறை நீங்கள் எருவைக் கொட்டும் போதும், பாஸ்பரஸ் நிலத்தில் நச்சு போலச் சேகரமாகிக்கொண்டே போகிறது.
2. அதிக பாஸ்பரஸ் மைக்கோரைசா பூஞ்சைகளை எப்படிக் கொல்கிறது?
நாம் VV-036T மற்றும் VV-029 பதிவுகளில் பார்த்தபடி, மண்ணில் நகராத நுண் தாதுக்களை வேருக்குக் கொண்டு சேர்க்க மைக்கோரைசா பூஞ்சைகள் (AMF) எவ்வளவு முக்கியம் என்று பார்த்தோம்.
மண்ணில் கரையாமல் கிடக்கும் பாஸ்பரஸையும் துத்தநாகத்தையும் எடுத்துத் தர வேண்டும் என்பதற்காகத்தான் தாவரம் தன் வேர்ச் சுரப்புகள் வழியே கார்பன் சர்க்கரையைக் கூலியாகக் கொடுத்து இந்தப் பூஞ்சைகளை வளர்க்கிறது.
ஆனால், மண்ணில் பாஸ்பரஸ் அளவு மிக அதிகமாக உயர்ந்துவிட்டால்:
- சுவிட்ச் ஆஃப் ஆகுதல்: வேர் முனையிலேயே அதிகப்படியான பாஸ்பரஸ் இலவசமாகக் கிடைப்பதை உணர்ந்தவுடன், தாவரம் தன் எஞ்சினை மாற்றுகிறது.
- ஹார்மோன் நிறுத்தம்: பூஞ்சைகளை வேருக்குள் அழைக்கும் 'ஸ்ட்ரிகோலாக்டோன்' (Strigolactone) சிக்னல் ஹார்மோன்களைச் சுரப்பதை வேர்கள் உடனடியாக நிறுத்துகின்றன.
- பூஞ்சைகளின் பட்டினிச் சாவு: பூஞ்சைகளுக்குக் கொடுத்து வந்த கார்பன் உணவைத் தாவரம் முற்றிலும் நிறுத்திவிடுகிறது.
மண்ணில் இருக்கும் அதிகப்படியான பாஸ்பரஸ், தாவரத்திடம் "இனி நமக்கு பூஞ்சைகள் தேவையில்லை" என்று சொல்ல வைக்கிறது. இதனால் மைக்கோரைசா பூஞ்சை வலைப்பின்னல் சிதைந்து, மண் மீண்டும் ஒரு ஆரம்பக்கட்ட பாக்டீரியா குப்பையாக மாறுகிறது!
3. துத்தநாகம் (Zinc) மற்றும் இரும்புச் சத்து முடக்கம்
பாஸ்பரஸ் நச்சு என்பது நேரடியாகத் தெரிவதில்லை; அது மற்ற நுண் தாதுக்களை லாக் செய்து மறைமுகமாகத் தாக்குகிறது:
- துத்தநாக முடக்கம் (P-Zn Antagonism): மண்ணில் பாஸ்பரஸ் அதிகமாகும் போது, அது மண்ணில் உள்ள துத்தநாகத்தோடு (Zinc) இணைந்து நீரில் கரையாத ஜிங்க் பாஸ்பேட் ஆக மாறுகிறது. துத்தநாகம் இல்லை என்றால் இலைகள் சிறிதாகி, தூர் கட்டுவது பெரிதும் குறைந்து போகும்.
- இரும்புச் சத்துக் குறைபாடு: இதேபோல இரும்புச் சத்தையும் (Iron) பாஸ்பரஸ் சிறைபிடிப்பதால், இளம் இலைகள் பெரும்பாலும் பச்சையத்தை இழந்து வெளுத்துப்போகும்.
அதிரடி விதி: எப்போது கம்போஸ்ட்டை நிறுத்த வேண்டும்?
பாஸ்பரஸ் நச்சு நிறைந்த மண்ணைச் சரிசெய்வது மிகக் கடினமான வேலை. ஏனெனில் தண்ணீரைப் பாய்ச்சி பாஸ்பரஸைக் கழுவி வெளியேற்ற முடியாது. பயிர்களை வைத்தே அதை உறிஞ்சி எடுக்க வேண்டும்.
🚫 மீளுருவாக்க விவசாயத்தின் அக்மார்க் விதி
உங்கள் மண் பரிசோதனையில் கிடைக்கும் பாஸ்பரஸ் (Olsen P) அளவு 25 PPM-க்கு மேல் இருந்தால்:
🛑 உடனடியாக இதைச் செய்யுங்கள்:
அடுத்த 1 முதல் 2 ஆண்டுகளுக்கு மாட்டுச் சாணம், கோழி எரு, மற்றும் சாணக் கம்போஸ்ட்டுகளை நிலத்தில் போடுவதை நிறுத்துங்கள்!
இந்த 2 ஆண்டு இடைவெளியில் என்ன செய்ய வேண்டும்?
- எருவில்லாத பல்லுயிர் மூடு பயிர்கள்: கடுகு, சோளம், தக்கைப்பூண்டு போன்ற பயிர்களை எரு எதுவும் போடாமல் வளர்த்து மடக்கி உழுங்கள். இவை மண்ணில் உள்ள அதிகப்படியான பாஸ்பரஸை வேகமாக உறிஞ்சி சமநிலைப்படுத்தும்.
- தாவரக் கழிவு கார்பன் மட்டுமே: சாணத்தைத் தவிர்த்து, மரத்தூள், வைக்கோல், அல்லது பயோசாரை ஹியூமிக் அமிலத்தோடு மட்டும் கலந்து பூஞ்சைகளுக்கு உணவாக இடுங்கள்.
- இலைவழி துத்தநாகத் தெளிப்பு: வேர் பகுதியில் பாஸ்பரஸ் துத்தநாகத்தை லாக் செய்திருப்பதால், ஃபல்விக் அமிலத்துடன் கலந்த துத்தநாகம் (Zinc) மற்றும் இரும்புச் சத்தை இலை வழியே தெளித்து இடைவெளியை நிரப்புங்கள்.
உண்மை என்னவென்றால், அந்த ரிப்போர்ட்-இல் உள்ள இயற்கை வேளாண்மை விவசாய நிலத்தில் பெருவாரியான பயிர்களை வளர்க்க முடியாது. அதை சீர் செய்வதற்க்கு குறைந்த பட்சம் 5 முதல் 7 ஆண்டுகள் ஆகும்.
கம்போஸ்ட் என்பது ஒரு மருந்து; அதை அள்ளிக் கொட்டும் குப்பைத் தொட்டியாக நிலத்தை மாற்றாதீர்கள். மண் பரிசோதனை செய்யுங்கள்; பாஸ்பரஸ் 25 ppm-க்கு மேல் இருந்தால் எருவுக்குத் தடை போடுங்கள்!
இன்னும் பேசுவோம்.
ரவிசங்கர் கருப்பையா
New ViVa Bio Nutrients
www.newviva.in
934 204 9144



